ஊழல் வழக்கில் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை.!!!
ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அவருக்கு 6 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்ததன் பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து, 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையுடன் 6 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.