பாரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது: பொலிஸ் – அதிரடிப்படை சுற்றிவளைப்பில் சிக்கிய சந்தேகநபர்கள்.!!!
சாய்ந்தமருது பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்றை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (04) அதிகாலை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக குறித்த கும்பலை கண்காணித்து வந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பயணித்த கார் ஒன்று பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து துரிதமாக நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர், துப்பாக்கி முனையில் குறித்த கும்பலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
