மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதி வெள்ளத்தில்: போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு – மக்கள் கடும் அவதி.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீதி உடைந்து அடித்துச் செல்லப்பட்டதால், அவ்வழியாக நடைபெற்று வந்த போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகஸ்தர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காக பாலத்திற்கு அருகில் தற்காலிக வீதி அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தற்காலிக வீதியை மூடிப் பாய்ந்ததுடன், அந்த வீதியையும் முற்றாக உடைத்து அடித்துச் சென்றுள்ளது.
இதன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் வீதியோரங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், அவசர மருத்துவத் தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்குச் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.
மழைக்காலம் ஆரம்பிக்கும்முன் பாலப் பணிகளை விரைந்து நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது வெள்ளத்தைக் தாங்கக்கூடிய வலுவான தற்காலிக வீதி அமைத்திருக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிகாரிகளின் திட்டமிடல் குறைபாடே இந்நிலைக்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வெல்லாவெளி போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வெள்ளம் வீதியை மூடிப் பாய்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்தை முற்றாகத் தடை செய்துள்ளனர்.
உடைந்த வீதியை அவசர அடிப்படையில் சீரமைக்க அல்லது பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக பாதுகாப்பான மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாக செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







