காத்தான்குடியிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்வு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடியிலிருந்து புராக் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளை வழியனுப்பும் நிகழ்வு இன்று (11) காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இம்முறை புராக் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலிருந்து 25 ஹாஜிகள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் அல் மனாஸிக் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் புராக் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் பிரதான ஹஜ் வழிகாட்டியுமான அஷ்ஷெய்ஹ் அல்ஹாஜ் மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தலைமையில் நாளை (12) காலை 08.50 மணிக்கு மக்கா நோக்கி புறப்படவுள்ளனர்.
இந்த வழியனுப்பு நிகழ்வில் ஹாஜிகளுக்கான விசேட மார்க்க சொற்பொழிவுகள், ஹஜ் பயண வழிகாட்டல் அறிவுரைகள் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதன்போது காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம பேஷ் இமாமுமான அல்ஹாஜ் மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் (பலாஹி) அவர்களினால் விசேட துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, முஹாஸபா செய்து ஹாஜிகளை வழியனுப்பி வைத்தனர்.



















