மருந்துத் தட்டுப்பாட்டால் தனியார் சுகாதாரத் துறையும் பாதிப்பு; அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை.!!!
அரசுத் துறை வைத்தியசாலைகளில் மட்டுமன்றி, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் சமல் சஞ்சீவ, தனியார் துறைக்கு மருந்துகளை விநியோகித்து வந்த பல நிறுவனங்கள், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் கொள்கைகள் மற்றும் பதிவு நடைமுறைகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதுவே தற்போது ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும், சந்தையில் போட்டித்தன்மையுடன் மருந்துகளை விநியோகிக்க போதுமான எண்ணிக்கையிலான நிறுவனங்களை பதிவு செய்ய அதிகார சபை தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதன் விளைவாக, நாட்டின் பல தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மாத்திரைகள், கெப்ஸ்யூல்கள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், நிலைமையை விரைவில் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.