அம்பாறையில் இரு பெண்கள் மர்ம மரணம்; உயிரியல் மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பி தீவிர விசாரணை.!!!
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள், நீதிமன்ற மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதமுனை–6ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (20) என்ற திருமணமாகாத இளம்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, பெரிய நீலாவணை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் மரண விசாரணையை மேற்கொண்டு, உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதால் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், சடலத்திலிருந்து பெறப்பட்ட சில உயிரியல் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் மல்வத்தை–03 பகுதியைச் சேர்ந்த சிப்னா (28) என்ற ஒரு பிள்ளையின் தாய், கடந்த வியாழக்கிழமை (23) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

