பௌத்த விகாரைகள் மீது அரச தலையீடு வேண்டாம் – இராஜாங்கனை சத்தாரதன தேரர்.!!!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனித இடங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முயல்வதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என இராஜாங்கனை சத்தாரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவொன்றின் மூலம் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் மக்கள் ராஜபக்ஷர்கள், பிரேமதாஸக்கள் மற்றும் விக்கிரமசிங்க போன்ற ஆட்சியாளர்களை அகற்றியது, நாட்டைச் சூறையாடிய ஊழல்வாதிகளை வெளியேற்றி, நாட்டைச் சீரமைப்பதற்காகவே தவிர, தலதா மாளிகை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட புனித விகாரைகளை அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இன்று சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அபாயகரமான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விகாரைகளுக்குள் இடம்பெறும் சில தவறான மற்றும் சமூக விரோதச் செயல்களையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள தேரர், சிறுவர்களைத் துறவறம் பூணச் செய்து துஷ்பிரயோகம் செய்வது, பக்தர்களை தவறான நோக்கில் அணுகுவது, விகாரை வளாகங்களில் முறையற்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் கவலைக்குரியவை என கூறியுள்ளார்.
ஒரு பிக்கு தர்மம் கேட்க வரும் மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமே தவிர, அவர்களை தனிப்பட்ட அறைகளுக்கு அழைத்து முறையற்ற முறையில் நடப்பது அப்பட்டமான துஷ்பிரயோகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் இராஜாங்கனை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.