இலங்கையில் PayPal சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்: டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய மைல்கல்.!!!
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக PayPal பணப்பரிமாற்ற சேவை இன்று (15) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சுயதொழில் செய்பவர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த PayPal சேவை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
முதற்கட்டமாக இலங்கை வங்கி (BOC), கொமர்ஷல் வங்கி (Commercial Bank) மற்றும் சம்பத் வங்கி (Sampath Bank) ஆகிய வங்கிகளின் ஊடாக இச்சேவையைப் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம் உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பாதுகாப்பான முறையில் சர்வதேச ரீதியில் இருந்து பணப்பரிமாற்றங்களை நேரடியாகப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகிறது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை மூலம் நாட்டின் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஆன்லைன் தொழில்முனைவோர் சர்வதேச சந்தையுடன் நேரடியாக இணையும் வாய்ப்பும் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.