புத்தளத்தில் கடும் மழை – 7,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு; 27,000க்கும் அதிக மக்கள் வெள்ளத்தால் அவதி.!!!
புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று (13) மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் வை.ஐ.எம். சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழையினால் புத்தளம், ஆனமடுவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவே அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அங்கு 19 கிராம சேவகர் பிரிவுகளில் 7,190 குடும்பங்களைச் சேர்ந்த 27,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்னாத்தவில்லு பகுதியில் ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி மற்றும் ரத்மல்யாய பகுதிகளில் வெள்ளநீர் வீதிக்கு மேலாகப் பாய்ந்து செல்லுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் தள வைத்தியசாலை, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம், பாடசாலைகள் மற்றும் பல அரச திணைக்களங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அவற்றின் இயல்பு செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



