காத்தான்குடியை நவீன நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தலைமையில் முக்கிய ஆய்வு.!!!
காத்தான்குடி நகருக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நேரடி கள ஆய்வும் கலந்துரையாடலும் நேற்று (03) நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த கள ஆய்வின் போது, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதன்போது சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக பிரதான வீதியை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் வாகன நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பிரதான வீதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வாகன நிறுத்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக ஒழுங்குமுறையான வாகன தரிப்பிடத்தை (Parking Facility) அமைப்பதற்கான திட்டங்களும் ஆராயப்பட்டன.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் காத்தான்குடியின் நகர அழகு மேலும் மேம்படுத்தப்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கவும், உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகள் புத்துயிர் பெறவும் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கள ஆய்வில் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம், நகர சபை உறுப்பினர்களான பொறியியலாளர் ரியாஸ் மஹ்மூத், இ.எம். றுஸ்வின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


