நீர் விளையாட்டின்போது ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்; விரைந்து மீட்ட கடற்படை.!!!
நுவரெலியா கிரகரி ஏரியில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட இரு சிறுவர்களை இலங்கை கடற்படையின் உயிர்காப்புப் பிரிவினர் நேற்று (16) மாலை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கிரகரி ஏரியில் நீர் விளையாட்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அவதானித்த கடற்படை உயிர்காப்புக் குழுவினர் உடனடியாக செயற்பட்டு, நீரில் சிக்கியிருந்த இரு சிறுவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் 11 மற்றும் 13 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரகரி ஏரியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படை உயிர்காப்புக் குழுவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டு வருவதுடன், அவசர நிலைமைகளில் உடனடியாக தலையிட்டு உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
இதேவேளை, சிறுவர்கள் நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பில் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை கடற்படை வலியுறுத்தியுள்ளது.







