கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு; பிரச்சினைக்கு தீர்வு கோரிக்கை.!!!
கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருகின்றன.
வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதே இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் நோக்கம் என தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புதிய சிற்றூழியர்களின் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய நியமனங்கள் தொடர்பான சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்துடனான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

