கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கு காத்தான்குடியில் இரு பள்ளிவாயில்களால் கௌரவிப்பு.!!!
-எம்.எஸ்.எம். நூர்தீன்-
பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி பதவியிலிருந்து செல்லும் மேஜர் ஜெனரல் ஜானக பள்ளேகும்பர அவர்களை கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வுகள் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றில் நடைபெற்றன.
காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியில் அமைந்துள்ள பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற நிகழ்வில் முதலில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. பிரார்த்தனையை அல் ஜாமியத்துர் ரப்பானியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஏ.எம். மஜீத் ரப்பானி நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜானக பள்ளேகும்பர அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அதிபர் நியாஸ் பொன்னாடையை போர்த்தி கௌரவித்தார். நினைவுச் சின்னம் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் பொதுச் செயலாளர் மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் ரப்பானி B.Com அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெசீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயிலிலும் கட்டளைத் தளபதியை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு பள்ளிவாயலின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான எம்.ஐ. ஜவாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பள்ளிவாயல் இமாம் மௌலவி இல்ஹாம் பாலாஜி B.A. வாழ்த்துரையை வழங்கினார். தொடர்ந்து பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் மேஜர் ஜெனரல் ஜானக பள்ளேகும்பர அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் மௌலவி ரமீஸ் உள்ளிட்ட பள்ளிவாயல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட கல்லடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி பிரிகேடியர் ஆர்.டி. ராஜபக்ச உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பள்ளேகும்பர அவர்களினால் இரண்டு பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.











