துறைமுகங்களில் முடங்கிய 1,000 வாகனங்கள்; உடனடி விடுவிப்புக்கு இறக்குமதியாளர்கள் கோரிக்கை.!!!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border LCs) தொடர்பான சிக்கல்கள் காரணமாக துறைமுகங்களில் நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் சுமார் 1,000 வாகனங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடன் கடிதங்கள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வாகனங்களை உரிய முறையில் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெருமளவிலான நிதி இழப்புகளையும் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், துறைமுகங்களில் நீண்டகாலமாக வாகனங்கள் தேங்கியுள்ளதால், அவற்றுக்கான துறைமுகக் கட்டணங்கள் உள்ளிட்ட மேலதிக செலவுகளும் அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, வாகனங்களை விடுவிப்பதற்கு தடையாக உள்ள சட்டரீதியான மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து, துறைமுகங்களில் முடங்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களையும் விரைவாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்ய வேண்டும் என இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.