மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை: மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் மோசமான காலநிலை காரணமாக எந்தவொரு மீனவரும் கடலுக்கு சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக காத்தான்குடி, புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி, வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் மீன்பிடி படகுகள் அனைத்தும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கரையோரங்களில் இயங்கும் அனைத்து மீன்பிடி வாடிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதாகவும், விலை அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மீன்பிடி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர் சமூகத்தின் அன்றாட வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

