5 கிலோ தங்கம் வழங்குவதாகக் கூறி 18 கோடி ரூபா மோசடி: சந்தேகநபர் கைது.!!!
கொழும்பில் வர்த்தகர் ஒருவரிடம் 5 கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி 18 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நாளைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 5 கிலோ தங்கம் வழங்குவதாகக் கூறி 18 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மற்ற இரண்டு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.