7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி கைது.!!!
மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 2 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம், 2 மின்னணு தராசுகள் மற்றும் 4 கைப்பேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.