கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 புதிய சுற்றுலா சேவை கவுண்டர்கள்; அமைச்சரவை அனுமதி.!!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் 6 சுற்றுலா சேவை கவுண்டர்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விமானப் பயணிகளுக்கு தேவையான சுற்றுலா சேவைகள் மற்றும் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த சேவை கவுண்டர்களை இயக்குவதற்கான நிறுவனங்களைத் தெரிவுசெய்ய தேசிய போட்டி அடிப்படையிலான கேள்விப்பத்திர முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதன்போது மொத்தம் 10 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 6 நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய விமானப் பயணிகள், விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தமக்குத் தேவையான சுற்றுலா தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், இந்த 6 சேவை கவுண்டர்களுக்கான ஒப்பந்தத் தொகைகள் அனைத்தும் வரி இல்லாத பெறுமதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.