கடல் கொந்தளிப்பு அதிகரிக்கும் அபாயம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!!!
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கான அடுத்த 24 மணித்தியால வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன், காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும்.
குறிப்பாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில், அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்குள் வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் பயணம் செய்வோர், மீனவ சமூகத்தினர் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.