நேபாள வெள்ளப் பேரழிவு; மீட்புப் பணிக்கு களமிறங்கும் ஐக்கிய நாடுகள் சபை.!!!
நேபாளம் மற்றும் சீனாவில் கடுமையான வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
நேபாளம் மற்றும் சீனாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு பல உயிர்களை காவு கொண்டதுடன், ஏராளமானோர் காணாமல் போகவும், பரவலான சேதங்கள் ஏற்படவும் காரணமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருடனும் தாம் துணை நிற்பதாக தெரிவித்த அன்டோனியோ குட்டெரெஸ், நேபாள அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களும் அதன் பங்காளர்களும் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்கும் நோக்கில் தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.