மட்டக்களப்பில் வெள்ளரிப்பழ அறுவடை ஆரம்பம்: கடும் வெப்பத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் பயிர்செய்கைக்கு அதிக கிராக்கி.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதால் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அதிகளவில் நன்மையடந்து வருவதுடன் தற்போது வெள்ளரிப்பழ அறுவடையும் ஆரம்பித்துள்ளது.
கடுமையான உஷ்ணத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக வெப்பமான காலங்களில் பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை அதிகமாக பானமாக அருந்தி வருகின்றனர். உடல் சூட்டை தணிப்பதில் இப்பழங்கள் பாரிய பங்களிப்பு செய்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான விவசாயிகள் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 ஏக்கரில் வெள்ளரிப்பழச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகமாக ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தாழங்குடா போன்ற இடங்களில் அதிக அளவிலான விவசாயிகள் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் வெள்ளரிப்பழக்கங்களுக்கு மாவட்டத்தில் அதிகமான கிராக்கி நிலவுவது வழமை.








