சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்.!!!
-எம்.எஸ்.எம். ஸாகிர்-
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “சிறுவர்களுக்கு நியாயமான விளையாட்டு – பெரியவர்களுக்கு கண்ணியமான வேலை” மற்றும் “சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க ஒன்று சேருவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இன்று (12) நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து பாடசாலையின் இணைப்பாடவிதானப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சிறுவர் தொழிலாளர்களை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.
பாடசாலையின் ஆங்கிலப் பாட ஆசிரியர் திருமதி சிராபா தமீம் அவர்களின் இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட வீதி நாடகத்தில் மாணவர்கள் பலர் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்ததுடன், தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விழிப்புணர்வு வாசகங்களும் முன்வைக்கப்பட்டன. இதன்போது சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்வஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.ஐ. முஃவாபிகா பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலீக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். விசேட அதிதியாக பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ. பிரகலாதனும் பங்கேற்றார்.
நிகழ்வை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ. குகராஜ் ஒருங்கிணைத்ததுடன், பாடசாலை சார்பில் ஆசிரியர் யூ.கே.எம். முபாறக் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
நாடகத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கான பரிசில்கள் சாய்ந்தமருது சமூக ஆர்வலர் திருமதி எம்.ஐ. பாரிசா அவர்களின் அனுசரணையில் அதிதிகளால் வழங்கப்பட்டன.
நிகழ்வின் ஒரு பகுதியாக தொழில் திணைக்கள உத்தியோகத்தர் எஸ். கணேசமூர்த்தி தலைமையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும், தொழில் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான விளக்க நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் அபிவிருத்தி, கல்வி மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிறுவர் தொழிலாளர்களை ஒழித்து, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.













