முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கைது: இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை.!!!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டசாலை தொல்பொருள் பகுதியில் இருந்ததாகக் கூறப்படும் ‘சந்திரவட்ட’ கல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலும், மற்றுமொரு குற்றச்சாட்டின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக ஆறு பணியாளர்களை இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தி, அவர்களுக்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.