சந்திரகாந்தனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக: மட்டக்களப்பில் அடையாள சத்தியாகிரகப் போராட்டம்.!!!
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் இன்று (17) அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம்பெற்றது.
இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற இந்த அமைதியான போராட்டத்தில், சிறைச்சாலை ஆணையாளர் சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும், கைதிகளும் மனிதர்களே, அவரது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தீர்வு வழங்க வேண்டும், தடுப்பு காவல் கைதிக்கான வசதிகளை வழங்க வேண்டும் எனக் கோரிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புப் பட்டி அணிந்தவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்தவர்கள், சிறையில் இருக்கும் சந்திரகாந்தனின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் சில அடிப்படை சலுகைகள் கூட அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
எனவே அவருக்கு உரிய அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதுடன், பொருத்தமான சிறைச்சாலைக்கு மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளை, நாட்டின் நீதித்துறையை தாங்கள் மதிப்பதாகவும், சந்திரகாந்தன் குற்றம் செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.








