மக்களை அவமதிக்கும் பொலிஸாருக்கு எதிராக விசாரணை; தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை.!!!
மக்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வதுபிட்டிவல பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்துமாறு கூறியபோது, சாரதியிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், குறித்த விசாரணையின் அடிப்படையில் அந்த உப பொலிஸ் பரிசோதகரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிள் சாரதியிடம் “வேண்டுமானால் எனது சீருடையை நீயே போட்டுக்கொள்” என உப பொலிஸ் பரிசோதகர் கூறியதாகக் காணப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
பொதுமக்களுடன் பொலிஸ் அதிகாரிகள் மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் எந்தவித தளர்வுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.