அம்புலன்ஸ்களுக்கு மாற்றாக அவசர சேவைக்கு ‘அம்புலன்ஸ் மோட்டார் சைக்கிள்’ அறிமுகம்.!!!
அவசர நிலைமைகளில் நோயாளிகளை விரைவாக சென்றடையும் நோக்கில், 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் புதிய மோட்டார் சைக்கிள் மருத்துவக் குழு சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு தாமதமாகும் சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி வழங்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வருட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் வாகன எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதுடன், உலகத் தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய மோட்டார் சைக்கிள் சேவையின் ஊடாக, அம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக மருத்துவப் பயிற்சி பெற்ற குழுவினர் நோயாளியின் இருப்பிடத்தை விரைவாக சென்றடைந்து அவசர முதலுதவிகளை வழங்க முடியும்.
போக்குவரத்து நெரிசல், தூரப் பிரதேசங்கள் அல்லது வேறு காரணங்களால் அம்புலன்ஸ் சேவை தாமதமாகும் சந்தர்ப்பங்களில் இந்த திட்டம் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்துடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கடனுதவி மூலம் புதிய அம்புலன்ஸ் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
