கொழும்பு துறைமுகத்தின் சுகாதாரப் பாதுகாப்புக்கு ரூ.168 மில்லியன் முதலீடு; புதிய 5 மாடி அலுவலகம் திறந்து வைப்பு.!!!
சர்வதேச எல்லைப்புற சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு துறைமுகத்தில் ரூ.168 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ஐந்து மாடிகளைக் கொண்ட துறைமுக சுகாதார அலுவலகம் (Port Health Office) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) அமலாக்கத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
புதிய கட்டடத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
கடல் மார்க்கமாக நாட்டிற்குள் நுழையக்கூடிய தொற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்தல் மற்றும் அவசர சுகாதார அச்சுறுத்தல்களை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட முக்கிய பணிகள் இந்த புதிய துறைமுக சுகாதார அலுவலகத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் மீளுருவாக்கப் பாதையில் பயணிக்கும் தற்போதைய சூழலில், துறைமுகங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தேசிய பொருளாதாரத்தின் நீடித்த ஸ்திரத்தன்மைக்கான முக்கிய முதலீடாகும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதா, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IOM செயல்பாட்டுத் தலைவர் கிரிஸ்டின் பார்கோ, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சலிந்த பண்டார, பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ்.எம். ஆர்னல்ட், துறைமுக சுகாதார அதிகாரி டாக்டர் ஏ.எஸ். மஹிபால உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.






