காத்தான்குடியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு; பொதுமக்கள் உடனடி நடவடிக்கை கோரிக்கை.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி பிரதேசத்தின் பிரதான வீதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பிரதான வீதிகள், கடற்கரைப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் கூட்டமாகச் சுற்றித்திரியும் மாடுகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாகன சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், எந்நேரமும் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் பல பகுதிகளிலும் கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் நடமாடுவதால் விபத்து அபாயங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளமை முன்பும் பதிவாகியுள்ளது.
எனவே, உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





