ஈரானிய கப்பல்கள் இலங்கைக்கு அருகில் நங்கூரம்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு.!!!
இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்கு (EEZ) அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை எனவும், அக்கப்பல்களுக்கு இலங்கை எந்தவொரு வசதிகளையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஈரானிய கப்பல்கள்
‘TankerTrackers’ இணையதளத்தின் தகவலின்படி, தங்கள் துறைமுகங்களை நோக்கிப் பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாக குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கிப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் ‘நிழற்படை’ (Shadow Fleet) கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
கப்பல்களில் எரிபொருள் இல்லை
எனினும், தற்போது குறித்த கப்பல்களில் எரிபொருள் எதுவும் இல்லை என ‘TankerTrackers’ சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை கரையிலிருந்து 19 கடல் மைல் தொலைவில் இருந்த ‘ஐரிஷ் டேனா’ (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த சம்பவத்தின் பின்னணியில், இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் 12 கடல் மைல் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை எனவும் ‘TankerTrackers’ தெரிவித்துள்ளது.