வெனிசுலா எண்ணெய் வயல்களில் அமெரிக்க முதலீடு; 100 பில்லியன் டொலர் திட்டம்.!!!
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் சுமார் 65 பில்லியன் பீப்பாய்களை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா தரப்பின் அறிக்கையின்படி, சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் வெனிசுலாவின் பெட்ரோலியத் துறைக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்கவும், அந்நாட்டு அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரி வருவாயை ஈட்டவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்புடன் ஒப்பிடுகையில், குறித்த 65 பில்லியன் பீப்பாய்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டால், இதுவரை பயன்படுத்தப்படாமல் காணப்படும் வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.