செவனகல சீனி ஆலையில் உற்பத்தி நிறுத்தம்; நிர்வாகம் அதிரடி முடிவு.!!!
வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் செவனகல பிரிவிலுள்ள சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் செவனகல பிரிவைச் சேர்ந்த சில ஊழியர்கள் தமது கடமைகளிலிருந்து விலகி, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்படும் நிதி இழப்பைத் தடுக்கும் வகையில், கடந்த 26 மற்றும் 27ஆம் திகதிகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களைத் தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று 28ஆம் திகதி மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியால் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வழமைபோல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததால், தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி மூட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.