உலகின் முதல் 20 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம்; இலங்கைக்கு புதிய பெருமை.!!!
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொள்கலன் கையாளல் நடவடிக்கைகளில் 11.9 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான முதல் 20 கொள்கலன் துறைமுகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சர்வதேச கடல்சார் தரவுகளை வெளியிடும் Alphaliner அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆவது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்து முதல் 20 துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் ஊடாக மொத்தம் 4,444,034 கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளன.
இது, 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் கையாளப்பட்ட 3,972,053 கொள்கலன்களுடன் ஒப்பிடுகையில் 471,981 கொள்கலன்கள், அதாவது 11.9 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு முழுவதும் கொள்கலன் கையாளலில் பதிவு செய்யப்பட்ட சாதனையை 2026 ஆம் ஆண்டில் முறியடிக்க முடியும் என இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களை இணைக்கும் பிரதான கடல் வழித்தடங்களின் மையத்தில் அமைந்துள்ள கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் முக்கிய மீள் கப்பல் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகச் செயற்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியிலும் கொழும்பு துறைமுகம் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு, 13.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் கொள்கலன் கையாளல் தேவைக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறன்களை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் துறைமுகத் துறைக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.