கிழக்கு மாகாண ஆளுநருடன் இந்திய உயர் ஆணைக்குழு அதிகாரி சந்திப்பு.!!!
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின் முதல் செயலாளர் (கல்வி) சந்தீப் சௌத்ரி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரா ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று (28) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள், இந்திய அரசினால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் அரசு ஊழியர்களின் தொழில்முறை திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் கல்வி உதவித்தொகைகளுக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாண அரசு ஊழியர்களின் பணித்திறன் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான கல்வி மற்றும் திறன் பயிற்சிகளை வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாக இந்திய உயர் ஆணைக்குழுவின் முதல் செயலாளர் சந்தீப் சௌத்ரி உறுதியளித்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நல்லுறவின் அடையாளமாக, சந்திப்பின் நிறைவில் இருதரப்பினரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.



