கிழக்கு மாகாண சதுரங்கத்தில் கல்முனை ஸாஹிரா மீண்டும் சாதனை – ஆண்கள் பிரிவில் இரட்டைப் பட்டம் கைப்பற்றி மாகாண சம்பியன்.!!!
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கச் சுற்றுப்போட்டி கிண்ணியா மகளிர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியப் பாடசாலை ஆண்களுக்கான இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மாகாண சம்பியன் பட்டத்தை வென்று மீண்டும் தனது சாதனை வரலாற்றைப் புதுப்பித்துள்ளது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கல்முனை ஸாஹிரா தேசியப் பாடசாலையின் 17 வயதுக்குட்பட்ட அணியின் ஏ. அர்ஹம் பர்வீஸ் தனியாள் Board Champion பட்டத்தை வென்றார். அதேபோன்று 20 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.இஸட்.எம். சனீப், ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத் மற்றும் ஜே.எம். இஸ்ஸத் சஹ்மி ஆகியோரும் Board Champion களாகத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதன்மூலம் வெற்றி பெற்ற மாணவர்கள் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு பயிற்சியளித்து போட்டிக்குத் தயார்படுத்திய பொறுப்பாசிரியர் எம்.வை.எம். றகீப், சதுரங்கப் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.எம். சுஹ்தான் மற்றும் ஆசிரியர் எச்.எம். ஜெமீன் ஆகியோரின் அர்ப்பணிப்பும் இவ்வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பாராட்டப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும் கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபீர் (SLEAS), இணைப்பாடவிதானப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ். முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA) உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

