அல் அக்ஸா வட்டார அபிவிருத்திப் பணிகளை காத்தான்குடி நகர முதல்வர் பார்வையிட்டார்.!!!
எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி அல் அக்ஸா வட்டாரத்தில் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அல் அக்ஸா வட்டாரத்தில் வடிகான்களை சுத்தம் செய்தல் மற்றும் அவற்றிற்கு மூடி அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜவாஹிரின் நேரடி வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.
இந்த அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நீர் தேக்கங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் வடிகான் திருத்தப் பணிகள் மற்றும் மூடி அமைக்கும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கார்பட் இடப்பட்ட வீதிகளின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி நிற்காமல் இலகுவாக வடிந்தோடும் வகையில் காங்கிரீட் அமைக்கும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.











