காத்தான்குடியில் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம்: பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு.!!!
— எம்.ரி.எம்.யூனுஸ் —
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பண்முகப்படுத்தப்பட்ட (PSDG) திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (09) காத்தான்குடி கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 39 பயனாளிகளுக்கு தலா 15 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டன. சுமார் ஒருவருக்கு ரூ.15,000 பெறுமதியான இந்த உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் மர்யா ஹர்ஷினியின் வழிகாட்டலின் கீழ் கோழிக்குஞ்சுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் எம்.ஏ.எம். நஸீர், பிரஜா சக்தி உறுப்பினர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்தகைய வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.









