ஏறாவூரில் பொதுச் சந்தை புதிய கட்டடம்: கிழக்கு மாகாண ஆளுநரினால் திறந்து வைப்பு.!!!
ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில் ஏறாவூர் பொதுச் சந்தையின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (17) ஏறாவூரில் இடம்பெற்றது.
ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நளீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதோடு, விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். அப்துல் வாசித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதிய சந்தை வளாகம் ஏறாவூர் பிரதேசத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கட்டமைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அரசியல், சமூக மற்றும் மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.








