இலங்கை கடற்படையின் 10ஆவது மரைன் பயிற்சி நிறைவு; சம்பூரில் வீரர்களின் வெளியேறல் விழா.!!!
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10ஆவது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்கான வெளியேறல் அணிவகுப்பு நேற்று (29) திருகோணமலை, சம்பூரில் நடைபெற்றது.
சம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதுர நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகேமகே தலைமை தாங்கினார்.
எட்டு மாதங்கள் இடம்பெற்ற கடினமான மரைன் பயிற்சியில் விருப்பத்துடன் இணைந்த 36 கடற்படையினரில், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்கு மரைன் படைப்பிரிவு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
பயிற்சிக் காலத்தில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களுக்கு பிரதம விருந்தினரால் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
லெப்டினன்ட் வி.பி.ஏ. சசங்க 10ஆவது மரைன் படைப்பிரிவுப் பயிற்சியின் சிறந்த மரைன் உறுப்பினர், அனைத்துப் பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர் மற்றும் சிறந்த குறிபார்த்துச் சுடுபவர் ஆகிய பிரிவுகளில் கோப்பைகளை வென்றார்.
அதேவேளை, உடற்பயிற்சிப் பணியாளர் டபிள்யூ.எம்.ஜி.டி.பி. பண்டார சிறந்த உடல் தகுதிக்கான கோப்பையைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகேமகே, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பயிற்சியின் மூலம் பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி தாய்நாட்டின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்தில் நாட்டுக்கு எதிராக எழக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், அறிவையும் பயிற்சியையும் தொடர்ச்சியாக புதுப்பித்துக்கொண்டு அவதானத்துடன் கடமையாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள், தரைப்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும், பயிற்சியை நிறைவு செய்த கடற்படை வீரர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
