டெங்கு அபாயத்தில் இலங்கை; 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாயப் பகுதிகளாக அறிவிப்பு.!!!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 95,035 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய்த் தொற்றால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,699 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாகாண ரீதியில் அதிகளவான டெங்கு நோய்த்தொற்றுகள் மேல் மாகாணத்தில் 50,287 ஆக பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தில் 13,843, மத்திய மாகாணத்தில் 8,647, சப்ரகமுவ மாகாணத்தில் 7,808 பேருக்கும் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் 20,248 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகி அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டமாக காணப்படுகிறது.
இதேவேளை, நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மக்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுடன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.