ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் அதிர்ந்த கிவ்; 37 பேர் பலி – 4 குழந்தைகள் உட்பட 42 பேர் காயம்.!!!
உக்ரைன் தலைநகர் கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கூறப்படும் உக்ரைன் இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியசாலை மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை பின்னிரவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பீரங்கி குண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அருகிலுள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் காரணமாக அப்பகுதியிலிருந்து சுமார் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 42 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்குகின்றனர்.
மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இவ்வாறான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கக் கூடாது என ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆயுதக் களஞ்சியத்தை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அமைத்து வைத்தமை தொடர்பான அலட்சியம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிவ் நகரைச் சுற்றியுள்ள ஆயுதக் களஞ்சியங்கள் மீது சமீப மாதங்களில் இடம்பெற்றுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இந்தச் சம்பவம் உக்ரைன் மக்களிடையே மீண்டும் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.