நேபாள வெள்ளத்தில் சிக்கிய வங்கிப் பணப்பெட்டி; ரூ.92.68 லட்சம் கொள்ளையடித்த 29 பேர் கைது.!!!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.92.68 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டம் போடே கோசி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பல கட்டிடங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் மீட்புப் பணிகளும் தொடர்ந்து சவாலாக உள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பணப்பெட்டி ஒன்று தாதிங் மாவட்டம் கல்சி கிராமப் பஞ்சாயத்து 4-இல் உள்ள பேல்குகோலா அருகே திரிசூலி நதிக்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
அந்தப் பணப்பெட்டியை கண்ட சிலர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் எடுத்துச் சென்று, பின்னர் பலர் இணைந்து அதை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆகஸ்ட் 28ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் தாதிங் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆரம்பகட்ட விசாரணையிலேயே 29 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் ரூ.92.68 லட்சம் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கல்சி-4 மாஸ்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் சிலர் கல்சி-6 அடம்காட், சித்தலேக்-7 அடம்தார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாராயணி நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த தங்கக் காதணிகளை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, குறித்த இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரிடர் காலங்களில் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள பொலிஸார் எச்சரித்துள்ளனர்.