கடற்கரையில் சந்தேகப் பொதிகள்; சோதனையில் 240 கிலோவுக்கும் அதிகமான உலர்ந்த இஞ்சி.!!!
– கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –
மன்னார் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (24) திங்கட்கிழமை, வடமத்திய கடற்படை கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படை புஸ்ஸதேவ நிறுவனத்தினால் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் கடற்படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் அப்பகுதியில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த இஞ்சி மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு கடற்கரைப் பகுதிகள் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினரின் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
