11 நாடுகளின் பிரதிநிதிகள் கொழும்பில்; ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வ நற்சான்றிதழ் கையளிப்பு.!!!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 வெளிநாட்டு தூதுவர்களும் 4 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
இந்நிகழ்வில், இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் சார்பில் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
அதன்படி, பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இலங்கைக்கான தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
நற்சான்றிதழ் கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய இராஜதந்திரிகளுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.