சமுர்த்தி திணைக்களத்தில் ரூ.500 மில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டு; முன்னாள் அமைச்சர் தயா கமகே மீது முறைப்பாடு.!!!
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சட்டவிரோதமான முறையில் நியமனங்களை வழங்கி, 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமுர்த்தி ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் சோமசிறி லியனக, 2019 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில், சமுர்த்தி திணைக்களத்தில் முன்னாள் அமைச்சர் தயா கமகே சட்டவிரோதமான முறையில் பல நியமனங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டினார்.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு பல மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை பாரிய நிதி முறைகேடாக தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுவரை மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சோமசிறி லியனக தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுர்த்தி ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.