மின்சார கட்டண முறையில் புதிய புரட்சி; 3 இலட்சம் ஸ்மார்ட் மீற்றர்கள் நாடளாவிய ரீதியில்.!!!
• ADB-யின் 12.5 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் புதிய நுகர்வு நேரக் கட்டண முறைமை.
நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாட்டை மேம்படுத்தவும், மின்சார விநியோகக் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் 3 இலட்சம் ஸ்மார்ட் மின்சார மீற்றர்களை நாடளாவிய ரீதியில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு மின்சாரத் துறையின் மேம்பாட்டிற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்கியுள்ளது.
இதில், மொரகொல்ல நீர்மின் உற்பத்தி நிலையத்தின் வடிவமைப்புப் பணிகளுக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி, நுகர்வு நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ‘Time-of-Use’ கட்டண முறைமையுடன் கூடிய 300,000 ஸ்மார்ட் மின்சார மீற்றர்களை நாடளாவிய ரீதியில் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு வருட காலப்பகுதிக்குள் ‘Electricity Distribution Lanka (Private) Limited’ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட் மீற்றர் திட்டத்தின் மூலம் மின்சார நுகர்வை நேரத்தின் அடிப்படையில் கண்காணித்து, மின்சாரப் பயன்பாட்டை மேலும் திறம்பட நிர்வகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.