அசுத்தம் செய்த இடத்தையே சுத்தம் செய்ய வைத்த விமானப்படை; 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.!!!
• புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் CCTV மூலம் சிக்கியவர்கள்.
புதுப்பிக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்குள் வெற்றிலை துப்பிய மற்றும் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்த 1,000க்கும் மேற்பட்ட நபர்கள், அவர்கள் அசுத்தம் செய்த இடங்களையே சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டவர்களில் பல பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பயணிகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும் முனையத்தில் நிறுவப்பட்டுள்ள 24 மணி நேர CCTV கண்காணிப்பு அமைப்பின் ஊடாக இந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையை ஸ்குவாட்ரன் லீடர் இந்திகா விக்ரமசிங்க தலைமையிலான 25 விமானப்படை வீரர்களைக் கொண்ட குழுவினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுவதுடன், தினசரி 88 கண்காணிப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்த CCTV கண்காணிப்பு வலையமைப்பின் மூலம் பேருந்து நிலையத்தில் 1,286 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காட்சிகளின் அடிப்படையில் திருட்டு, சொத்து சேதம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 64 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.