புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் திருட்டு; சிசிடிவி மூலம் சில நிமிடங்களில் சந்தேகநபர் கைது.!!!
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியொருவரின் பையைத் திருடிய சந்தேகநபர், புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் உதவியுடன் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம், புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செயற்பாட்டு அறையின் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் மூலம் உடனடியாகக் கண்டறியப்பட்டது.
சம்பவத்தை அவதானித்த பணியிலிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்ததுடன், பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய செயற்பாட்டு அறையின் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு 24 மணி நேரமும் செயற்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகள் திருடப்படுவது போன்ற சம்பவங்களை கண்டறிவதுடன், திடீர் உடல்நலக்குறைவு, விபத்துகள் மற்றும் பிற அவசரநிலைகளின் போதும் விரைவான பதிலளிப்பை வழங்கும் வகையில் இந்தக் கண்காணிப்பு அமைப்பு செயற்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சூழலை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த நவீன கண்காணிப்பு அமைப்பு, பொது இடங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.