தபால் சேவையை நவீனமயமாக்கும் அரசு; ரூ. 14.7 மில்லியனில் புதிய தபால் நிலையம்.!!!
தபால் சேவையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய அரசாங்கத்தினால் ரூ. 14.7 மில்லியன் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் பொக்குனுவிட்டவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட மக்களுக்கு மேலும் திறமையான மற்றும் தரமான தபால் சேவையை வழங்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்றுமுன்தினம் (22) திறந்து வைக்கப்பட்டது.
புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 2025 நவம்பர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தபால் சேவை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசிய பொதுச் சேவையாகும் எனக் குறிப்பிட்டார்.
தபால் நிலையங்களை நவீனமயமாக்குவதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், கைத்தொழில்துறையினர் மற்றும் உற்பத்தித் துறையினருக்கு தேவையான வசதிகளை வழங்கக்கூடிய முக்கிய பொருளாதார உட்கட்டமைப்பாக தபால் சேவை மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தபால் திணைக்களம் 2025ஆம் ஆண்டில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக ரூ. 60 கோடி நிதி ஒதுக்கியிருந்த நிலையில், அதன் கீழ் 17 புதிய கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 11ஆவது தபால் நிலையமாக பொக்குனுவிட்ட தபால் நிலையம் அமைந்துள்ளது.
மேலும், 209 தபால் நிலையங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், அந்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் தற்போது 34 தபால் நிலையங்களும், 129 உப தபால் நிலையங்களும் இயங்கி வருகின்றன. பொக்குனுவிட்ட தபால் நிலையம் 4,319 குடும்பங்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதுடன், அதனுடன் இணைந்த சேவைகள் மூலம் 4,381 வீடுகள், 20 அரச நிறுவனங்கள், 18 தொழிற்சாலைகள் மற்றும் சுமார் 26 ஏனைய நிறுவனங்களுக்கும் பல்வேறு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தபால் சேவையின் உட்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 7 புதிய தபால் நிலையங்கள், 6 உப தபால் நிலையங்கள் மற்றும் 2 பல்நோக்குக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், 15 புதிய கட்டடங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில், திறமையான மற்றும் வசதியான அரசாங்க சேவைகளை வழங்கும் திறன் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




