பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள்: சுவீகரித்து சட்ட நடவடிக்கை – காத்தான்குடி நகர சபை எச்சரிக்கை.!!!
காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது.
நகர சபை எல்லைக்குள் உள்ள வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகள் தொடர்பான முழுமையான விவரங்களை நகர சபைக்கு வழங்குமாறும், சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் காணிகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்குமாறும் நகர சபையினால் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வறிவுறுத்தல்களை பின்பற்றாது பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள் இனங்காணப்படும் பட்சத்தில், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நகர சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையான தண்டப்பணம் விதிக்கப்படலாம் அல்லது அந்தக் காணிகள் நகர சபையால் சுவீகரிக்கப்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகர சபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
