24 மணி நேரத்தில் 1,069 புதிய டெங்கு நோயாளர்கள்: வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும் அபாயம் என எச்சரிக்கை.!!!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து 1,069 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47,179 ஆக அதிகரித்துள்ளதுடன், டெங்கு காரணமாக இதுவரை 28 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் பல வைத்தியசாலைகளின் கொள்ளளவு அதன் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், சிகிச்சை வசதிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடருமானால், முழு வைத்தியசாலை கட்டமைப்பும் செயலிழக்கும் அபாயம் உருவாகக்கூடும் என எச்சரித்த வைத்தியர் கபில கன்னங்கர, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுற்றுப்புறச் சுத்தம் மற்றும் கொசு பெருக்கிடங்களை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.